சிங்களம் மட்டும் மொழிச்சட்டத்தால் தமிழ்த் தேசியம் என்கின்ற தன்மான உணர்வு தமிழ் மக்களிடையே முளைவிட்டது. 56ம் ஆண்டு கலவரத்தால் கோபமும் அவமானமும் அடைந்த தமிழ்மக்களின் எண்ணங்களை உணர்ந்து கொண்ட தமிழரசுக்கட்சி திருமலையில் ஓகஸ்ட் மாதம் 19ம் திகதி 56ம் ஆண்டு தனது கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தியது. இங்கு தான் முதன் முறையாக நான்கு அம்சத்திட்டம் என்கின்ற பெயரில் தமிழ்மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை அடைவதற்காக அகிம்சை வழியில் தொடர்ந்து போராடப் போவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.